தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு; நடிகர் விஜய் நாளை அறிவிப்பு வெளியிடுவார் எனத் தகவல்

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.
அங்கு வருகிற 23-ம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று முன்தினம் பதிலளித்தது.
மாநாட்டு அனுமதி குறித்து ஓரிரு நாளில் போலீசார் பதிலளிப்பதாக த.வெ.க., நிர்வாகி புஸ்சி ஆனந்த் கூறினார். இந்த நிலையில், தவெக மாநாடு நடைபெறும் தேதியை நாளை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 11 மணி அளவில் விஜய் அறிவிக்க இருப்பதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் புதிய கட்சி தொடங்கியை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பதிவு செய்திருந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தற்போது அங்கீகாரத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *