கர்நாடகாவில், செய்தி சேகரிக்கச் சென்ற பி.டி.ஐ., செய்தி நிறுவன பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், அவதுாறாக பேசிய ஏ.என்.ஐ., நிறுவன செய்தியாளர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலையொட்டி மாநில துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சுரேஷ் பங்கேற்ற நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சி தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அங்கு கூடி இருந்தனர்.
இதில், பி.டி.ஐ., செய்தி நிறுவனம் சார்பில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் களத்தில் செய்தி சேகரித்தார். அப்போது, அவரிடம் மற்றொரு செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.,யின் செய்தியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், அந்நபரிடம் பெண் பத்திரிகையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
ஒரு கட்டத்தில், பெண் பத்திரிகையாளரை அவதுாறாக பேசியதுடன், அந்த நபர் தாக்கினார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு எடுக்கப்பட்ட ‘வீடியோ’வை, பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன், ஏ.என்.ஐ., நிறுவன செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், போலீசில் புகார் அளித்ததுடன், இவ்விவகாரத்தை தேசிய மகளிர் கமிஷனின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றார். இதையடுத்து, தேசிய மகளிர் கமிஷனின் உறுப்பினர் குஷ்பு, இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பெண் பத்திரிகையாளரை தாக்கிய நபர் மீதான விசாரணை முடியும் வரை, அவரை சஸ்பெண்ட் செய்து ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

