புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
காரசார விவாதத்துக்கு பின்னர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 454 எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர். எதிராக 2 எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர். எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது. நடப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவாகும். புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையையும் இம்மசோதா பெற்றது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று மகளிர் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் 11 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் இருந்த 245 எம்.பி.க்களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேற்ற நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

