கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மலப்புறம்–வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனாக்கம்போயில்–மேப்பாடி சுரங்கப்பாதை திட்டப்பணிகள் நடைபெறும் கள்ளாடி பகுதியில், மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. சம்பவம் நடந்தபோது கட்டுமான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதும், அதிகாரிகள் வருவதற்கு முன்பே உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு பலரை பாதுகாப்பாக மீட்டனர்.இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் யாரேனும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைவில் மீட்புப் பணியில் இணைய உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் வயநாடு பகுதியில் 265 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ச்சியான கனமழையே இந்த நிலச்சரிவுக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சில வாகனங்களும் இந்த விபத்தில் சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

