ஐசிசி உலகக் கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடிய இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியில் ஹசரங்கா மற்றும் சனகா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதன்படி 9 லீக் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
இலங்கை அணியின் தொடர் தோலிகளால் ஏமாற்றம் அடைந்த இலங்கை விளையாட்டுத் துறை தங்களுடைய கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டது.முதலில் இலங்கை அணியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லாத நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியால் அந்நாட்டு வாரியமே மொத்தமாக கலைக்கப்படுவதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சம் தெரிவித்தது.
அதற்கு இலங்கை வாரியத்தின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இலங்கை கிரிக்கெட் அணியை விரைவில் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று உறுதியளித்தனர். இச்சூழலில், நீதிமன்றம் விளையாட்டு அமைச்சகத்தின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், தான் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்த பின் அதன் மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

