ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 என்ற அமைப்பு செயல்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில், பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இத்தாலி தலைமை தாங்கி நடத்துகிறது.
இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 15 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
3 ஆவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த மாநாட்டின்போது பாலஸ்தீன பிரச்னை, உக்ரைன் ரஷ்யா போர் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மூலமாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஜி7 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனை பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார். இது தரப்பு உறவுகள் குறித்து முக்கியமாக இந்த சந்திப்பின்போது பேசப்படும்.
பிரதமர் மோடி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு பிரதமர்களும் கடைசியாக 2023 டிசம்பரில் அபுதாபியில் நடந்த COP28 உச்சிமாநாட்டின் போது சந்தித்தனர். அப்போது இந்தியா-இத்தாலி உறவுகள், பாதுகாப்பு, இந்தோ-பசிபிக், எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து முக்கியமாக பேசப்பட்டது.

