பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகின்ற 19 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருவதுடன் தேர்தல் வாக்குறுதிகளும் அளித்து வருகின்றன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்தார். அத்துடன், பொருளாதாரதில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்படும்.
சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மீண்டும் கொண்டு வரப்படும். நீட், CUET தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். குறிப்பாக 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி இலவசமாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ரயில் பயணங்களில் முதியோர்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும். புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். குறிப்பாக, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் கொண்டுவரப்படும். ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

