ஈராக்கில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டன குரல் வலுத்து வருகிறது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்று ஈராக். போர் சூழல், தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் கட்டாய ஹிஜாப் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. கடுமையான போராட்டத்துக்கு பிறகு 1959 ஆம் ஆண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை 9 ஆகக் குறைக்க ஈராக் சட்டத்துறை அமைச்சகம் மசோதா ஒன்றை தற்போது முன்மொழிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆண்களுக்கான திருமண வயதை 15 ஆக குறைக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.
இது குழந்தைத் திருமணம் மற்றும் பெண்கள் மீதான சுரண்டலை அதிகரிக்கும் என்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக நடந்த பல தலைமுறை போராட்டத்தை இந்த சட்டம் சீர்குலைக்கும் என்றும் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளன.
ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடப்பதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது ஈராக்கை பல தசாப்தங்கள் பின்னோக்கி நகர்த்தும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்ப விவகாரங்களில் நீதித்துறையே இதுவரை முடிவு எடுத்து வந்த நிலையில், இனி மத போதகர்களும் கூட முடிவெடுக்கலாம் என சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

