உத்தரகாண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கன மழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், அங்கு ஆதி கைலாஷ் பகுதிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு வந்த சிலர் தமிழகத்திலிருந்து சென்றுள்ளார். இதற்கிடையில், தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் புனித யாத்திரை மேற்கொண்ட தமிழகத்தினர் மலைப்பகுதியில் சிக்கி தவித்து வந்தனர். நிலச்சரிவில் சிக்கியுள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்” எனவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மாநில அரசின் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் உதவியுடன், மீட்பு குழுக்கள் செயல்பட்டு வந்த நிலையில் தமிழர்களை விரைந்து மீட்கும் நடவடிக்கைகள் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களின் மீட்பு நடவடிக்கைகள் மிகுந்த அவசரத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்பாக உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என தகவல் வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட்டுள்ளது.

