டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணிக்க துறை சார்ந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு, தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 20,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளின் அடிப்படையில் டெங்கு கொசு உற்பத்தி இடங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் ஆய்வகப்பிரிவு மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில் 120 இடங்களில், டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணிக்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு உற்பத்தியை தீவிரமாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

