முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளுக்கான நிகழ்ச்சி, தமிழக அரசின் சார்பில் நடைபெறும். இந்நிகழ்வில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் வகையில் நாளை நடைபெறவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளானது பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில், தமிழக அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதிமுக சார்பில், “ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கான ஆடம்பர விழாக்களை தவிர்த்து, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும் மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை கட்சியினர் வழங்க வேண்டும்” என அதிமுக தலைமை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

