முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், அந்த தொகை திருப்பி வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் aஅறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்திய ரயில்வே, பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முறையில் மற்றும் பிற சேவைகளில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. புதிய விதிமுறைகளின் அடிப்படையில், ஒரு பயனர் ஐடியில் இருந்து ஒரு நாளைக்கு 2 தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். மொபைல் அல்லது இணைய சேவையைப் பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயனர்கள், இனி ஓடிபி முறையை பயன்படுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தை திரும்பப் பெறலாம், மேலும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால் 75% பணம் திரும்ப கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், 50% பணம் திரும்ப கிடைக்கும்; அதே நேரத்தில், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த தொகையும் திரும்ப கிடைக்காது என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த முக்கிய மாற்றங்கள் மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த அறிவிப்பு ஏழை மற்றும் எளிய மக்களை பாதிக்கும். எனவே, ரயில்வே துறை இந்த அறிவிப்புகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

