பாகிஸ்தான் வான் பகுதி மூடப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் தனது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் நீண்ட தொலைவுக்கு சுற்றி செல்வதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது.
இதுகுறித்து டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம், மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. தற்போதைய சூழலில் கூடுதல் எரிப்பொருகள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்த வேண்டி உள்ளதால் செலவு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே நிலை 12 மாதங்களுக்கு தொடர்ந்தால் தங்கள் நிறுவனத்துக்கு 5 ஆயிரத்து 30 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள செலவை கணக்கிட்டு அதனை ஈடு செய்யும் வகையில் மானியம் வழங்க வேண்டும் என்றும் ஏர் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

