கோடை வெயிலின் அதிகரிப்பால், சென்னையில் வெளியில் செல்லும் போது குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனைத் தடுக்க, சென்னையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பட்டினபாக்கம், சிவன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா உள்ளிட்ட 40 இடங்களில் இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், 10 இடங்களில் இதற்கான அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார். இந்த ஏடிஎம்களில் 24 மணி நேரம் கிருமி நீக்கம் செய்யப்பட்ட தூய்மையான குடிநீர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 150 மிலி மற்றும் 1 லிட்டர் அளவுகளில் குறைந்த விலையில் பாட்டில்களில் குடிநீரை வாங்கலாம். தொட்டியில் நீரின் அளவு குறையும்போது எச்சரிக்கை சிக்னல் காட்டப்படும். இந்த விநியோக அமைப்பு பேட்டரி மூலம் செயல்படுகிறது. கட்டணம் செலுத்துவதற்கான முறையாக ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

