இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமானப்படை தளங்களில் சீனா தனது J-20 ரக ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானங்களை அதிகளவில் நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிரி ரேடார்களில் எளிதில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள், இந்திய எல்லைக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.சமீபத்திய செயற்கைக்கோள் படங்களின்படி, லடாக்கிற்கு அருகிலுள்ள ஹோடன் விமானப்படை தளத்தில் ஏழு J-20 போர் விமானங்களும், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகிலுள்ள டாம்சுங் விமானப்படை தளத்தில் நான்கு J-20 விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் குறைந்தது 11 J-20 போர் விமானங்களை இந்திய எல்லைக்கு அருகில் சீனா நிலைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய விமானப்படையில் தற்போது ரஃபேல் மற்றும் சுகோய்-30 MKI போன்ற நான்காம் மற்றும் 4.5ஆம் தலைமுறை போர் விமானங்கள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிடம் தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் செயல்பாட்டில் இல்லை.இந்த சூழலில், சீனாவின் J-20 விமானங்கள் இந்திய எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருப்பது பாதுகாப்பு ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவின் சொந்த ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான AMCA தற்போது உருவாக்க நிலையில் உள்ளது.AMCA விமானம் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவசரத் தேவைக்காக ரஷ்யாவின் Su-57 அல்லது அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்குவது குறித்து பாதுகாப்பு வல்லுநர்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

