*பேரவையின் 38வது விழா அழைப்பு மடல்*
எவ்வளவு வண்ணங்கள், சிரிப்பு, மகிழ்ச்சி. தமிழை முன்னிட்டுக் கூடுகிறோம். நம்முள் உள்ள வேற்றுமைகளை, ஏற்ற இறக்கங்களைக் களைந்து தமிழென்னும் ஒற்றைப் புள்ளியில் சேரும்போது எவ்வளவு மகிழ்ச்சி. ஒரு மாபெரும் மரத்தைச் சார்ந்து வாழும் பல உயிர்களைப் போல தமிழென்னும் மரத்தைச் சுற்றி நம்மை அமைத்துக் கொள்கிறோம். பெறுவதற்கு ஏதோவொன்று எல்லோருக்கும் அங்கே இருக்கிறது.தமிழ்ச்சங்கப் பேரவையின் முயற்சியில் ஆண்டு தோறும் நடைபெறும் தமிழ்க் கொண்டாட்டம் இந்த ஆண்டு இராலே நகரில் வரும் சூலை மாதம் 3, 4, 5ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. தமிழறிஞர்கள், கலைஞர்கள் எழுத்தாளர்கள் என பெரும்பட்டாளத்தை தமிழ்க் கயிறு கொண்டு கோக்கிறார்கள்.இவ்வளவு அழகிய தமிழ் மாலையை யார் தோளில் சூட்டிட? தமிழர்கள் நம் தோளில் அன்றி வேறு யாருக்குப் பொருந்தும்? தமிழ் இசை, கவியரங்கம், கருத்துக்களம், நாட்டியம் போன்றவை மட்டுமல்லாது பறையாட்டம் கம்பத்தாட்டம், சிலம்பாட்டம், கும்மி, ஒயிலாட்டம் என தமிழ் மாலைக்கு பல வண்ண மலர்கள் வரிசை கட்டி நிற்கின்றன.இம்முறை பல விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆடவர்/இருபாலர் கைபந்து, பெண்டிர் எறிபந்து, குறுந்தொடர் ஓட்டம், நடைப்போட்டி என அதிலும் குறைவில்லை.செந்தலை கவுதமன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் லிங்குசாமி, மாரி செல்வராசு, பேச்சுக்கலைஞர் முத்துக்குமரன், பெ.மணியரசன், நிர்மலா பெரியசாமி, என தமிழறிஞர்களும் தங்கள் தமிழறிவைப் பகிர்ந்து கொள்ள வருகிறார்கள்.இசையும் நாடகமும் இல்லாமலா?மருதுபாண்டியர் தொடர்பான நாடகம், “பரிதாபங்கள்” புகழ் கோபி – சுதாகர் நிகழ்ச்சி, டி. இமான், வாகீசன் இராசைய்யா போன்றோரின் இசைக் கச்சேரிகள் என இசைமயமான இரவும் உண்டு.நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உயரமாக குள்ளமாக அறிவாளியாக அன்பானவராக செல்வந்தராக எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கை நம்மை வைத்திருக்கலாம். நம்மை இணைத்து கட்டியிருப்பது தமிழென்னும் கண்ணுக்குத் தெரியாத உணர்வு. அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பவை பேரவை நிகழ்ச்சி போன்றலையும் அதன் பொருட்டு நாம் கூடி அளவளாவி மகிழ்வதும்.நமக்கு என்றுமே யாதும் ஊரே, அனைவரும் உறவினரே தான். இது நம் வீட்டு நிகழ்ச்சி என ஆகி விட்டது. நம் வீட்டு/உறவினர் வீட்டு நிகழ்ச்சியை தவற விடுவதாவது?நிகழ்ச்சி அரங்கு: இராலே மாநாட்டு மையம்.நாள்: சூலை 3, 4, 5.அனைவரும் வருக. அரங்கில் சந்திப்போம்.வாழ்க தமிழ், வளர்க தமிழர் வளம், ஒற்றுமை.



