மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஒரு பிரபல தனியார் விடுதியில் இன்று காலை தமிழக வெற்றி கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் 88 சட்டமன்றத் தொகுதியில் முதல் 3 இடங்களைப் பிடித்த தலா 3 பேர் வீதம் மொத்தம் 250க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முன்கூட்டியே தமிழக வெற்றி கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்து சான்றிதழ் பெறும் மாணவ-மாணவிகளுக்கு உரிய அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அழைப்பிதழுடன் வரும் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோருக்கு மட்டும் இன்று காலை விழா அரங்குக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பேருந்துகள் மற்றும் கார்களில் வந்து கலந்துகொண்டனர். நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் இன்றைய நிகழ்ச்சிக்கு காலை 9.10 மணியளவில் விழா அரங்கிற்கு வந்தடைந்தார். பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 250க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும் விஜய் கூட்டத்தில், ‘‘தேர்தலில் பணம் கொடுத்தாலும் வாங்க வேண்டாம் என்பது உங்களுக்குத் தெரியும். தேர்தலுக்கு பணம் வாங்காதீர்கள், என்றும் சாதி மதத்தை ஒதுக்கி வையுங்கள். விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை விற்கும்போது சாதி மதம் பார்ப்பதில்லை. பறவையைப் போல் சுதந்திரமாக, தைரியமாக, நம்பிக்கையுடன் பறக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் இரண்டவது கட்டமாக அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன் என மாணவ மாணவிகளுக்கு கூறி விடைபெற்றார்.இந்நிகழ்ச்சியில் தவெகவின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

