இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் நியூயார்க் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 34 வயதான ஸோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, 20 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர், மற்றும் முதல் தென்னாசியர் மேயராகுவும் ஆனார். கடந்த 100 ஆண்டுகளில் நியூயார்க் நகரின் இளைய வயது மேயர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.ஸோஹ்ரான் உகாண்டாவில் பிறந்தவர். 7 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவரது தந்தை மக்மூத் மம்தானி உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கல்வியாளர்; அவரது தாய் மீரா நாயர் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர். மம்தானி தனது தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதிகளாக அளித்தது:
- இனவெறி மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிராக போராடுதல்
- இலவச குழந்தை பராமரிப்பு வழங்குதல்
- அரசாங்கம் நடத்தும் உணவகங்கள் மற்றும் கடைகள் தொடங்குதல்
- பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்குதல்
- 2030க்குள் குறைந்தபட்ச ஊதியத்தை சுமார் $30 ஆக உயர்த்துதல் இதற்கான நிதியைப் பெற செல்வந்தர்களிடம் அதிக வரி விதித்தல் போன்றவை ஆகும்.
வெற்றிக்குப் பிறகு மம்தானி கூறினார்: “நீங்கள் அரசியலில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். இன்றைய அரசியல் இருட்டில், நியூயார்க் மீண்டும் ஒளிரும்.”அவரின் வெற்றி, அமெரிக்க நகர அரசியலில் பெரிய மாற்றமாகக் காணப்படுகிறது. இளம் தலைமுறை, சமூக ஊடக வீடியோக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட உற்சாகமான அடித்தளப் பிரச்சாரத்தால் அவர் வெற்றி பெற்றார்.

