நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில், இந்திய நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 558 வழக்குகள் 20 ஆண்டுகளையும், 26 வழக்குகள் 30 ஆண்டுகளையும் கடந்துள்ளன.நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 80,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. போதிய நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாமை, உள்கட்டமைப்பு குறைபாடு உள்ளிட்டவை வழக்குகள் தாமதமாக முக்கிய காரணங்களாக உள்ளன.உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதி பணியிடங்களில் 341 இடங்களும், கீழமை நீதிமன்றங்களில் உள்ள 30,868 பணியிடங்களில் 7,311 இடங்களும் காலியாக உள்ளன.5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் தீர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், வழக்குகளின் தேக்கத்தை குறைக்க பல்வேறு சட்டத் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

