ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஜூன் 9ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. ஆந்திராவைப் பொறுத்தவரை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவருக்கு எதிராக பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு களமிறங்கினார். அவர் எதிர்பார்த்ததைப் போலவே, பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
இன்று (ஜூன் 4) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே பெரும்பாலான தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு கட்சி முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் பிற்பகல் 4 மணி நிலவரப்படி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 133 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அவரது கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாண் கட்சியும் 21 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தாலும், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.
காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இதுபோன்ற நிலவரம் தொடர்ந்ததால், ஆந்திர முதலமைச்சராக 4ஆவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பது உறுதியானது. இதையடுத்து, அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9ஆம் தேதி அமராவதியில் பதவியேற்க உள்ளார். ஏற்கெனவே, சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ஆந்திராவில் ஆட்சியை பிடித்ததற்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

