ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதனால், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அரசின் சார்பில் எழுதப்பட்டு இருந்த வாசகங்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டன. மேயர் அறைக்கு சீல் வைத்து தேர்தல் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

