அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அமைப்பு புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த ஆண்டு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழையும்போது பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 85,119 இந்தியர்கள் பிடிபட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 23,830 ஆக குறைந்துள்ளது. இந்த குறைவு ஆறுதல் தருவதாக இருந்தாலும், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவோரில் இந்தியர்கள் இன்னும் முன்னணியில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை கூறுகையில், கண்காணிப்பு அதிகரிப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட கொள்கை மாற்றங்கள் மற்றும் குடிவரவு அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதே இந்த குறைவுக்கு முக்கிய காரணங்கள் என தெரிவித்துள்ளது. கடத்தல் பாதைகள் கட்டுப்படுத்தப்பட்டதும், எல்லை ரோந்து பணிகள் விரிவுபடுத்தப்பட்டதும், தண்டனைகள் கடுமையாக்கப்பட்டதும் இதற்குக் காரணமாகும். இருந்தாலும், எல்லை தாண்டும் முயற்சிகள் முழுமையாக நிற்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பும் நல்ல ஊதியமும் தேடி அமெரிக்காவுக்குச் சென்ற தனிநபர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

