அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.கங்கை சமவெளியைக் கைப்பற்றியதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தை நிறுவி “கங்கை கொண்ட சோழீசுவரர்” எனும் கோயிலைக் கட்டிய மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000 வது ஆண்டு நிறைவை (ஆயிரமாண்டு) நினைவுகூரும் வகையில் வரும் ஜூலை மாதம் 27ம் தேதி , மாமன்னன் ராஜேந்திர சோழனின் 1000ம் ஆண்டு நினைவு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் 1000 ம் ஆண்டு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். மேலும், தொல்லியல் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கோயில் வளாகத்தில் சைவ தமிழ் மன்னர்களின் வெற்றிகள், கோப்பைகள், அவர்களின் சிறிய அளிவிலான சிற்பங்களைக் கொண்ட கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இசையமைப்பாளர் இளையராஜா 20 நிமிட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இவ்விழாவை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுர கோயில் மின்விளக்குகளால் ஆலங்கரிக்கப்பட்டு மின்னுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

