உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் 39 வயதான சுபான்ஷு சுக்லா ,மேலும் அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர். சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்வெளியில் 60 வகையான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சுபான்ஷு சுக்லா மட்டும் 7 ஆய்வுகளை மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 18 நாட்கள் தங்கியிருந்தனர். தங்களது பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4.40 மணிக்கு விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் 4 பேரும் பூமி திரும்பினர். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று பூமிக்கு திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

