சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக நிதி ஆயோக் சிஇஓ பிவிஆர். சுப்பிரமணியம் கூறி உள்ளார்.வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பல்வேறு பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2022ல் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறிய நிலையில், தற்போது ஜப்பானை முந்தி 4வது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கிறது.2024ம் ஆண்டு வரையில் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. 2025 ம் ஆண்டு ஜப்பானை முந்தி 4வது பெரிய பொருளாதாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டி உள்ளது. தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இந்தியாவை விட பெரிய பொருளாதார நாடுகளாக உள்ளன. இன்னும் இரண்டரை அல்லது 3 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.2 சதவீத வளர்ச்சி காணும் என்றும் 2026ல் 6.3 சதவீதத்துடன் நிலையான வளர்ச்சியை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இருக்கும் சீனாவுக்கு மாற்றாக வேறு நாட்டின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகிறது. இதில் இந்தியா முக்கிய இடத்தை பிடிப்பதால் பல வெளிநாடு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. எனவே, திட்டமிட்டபடி விரைவில் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச பொருளாதார வல்லுநர்களும் கூறுகின்றனர். 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 30 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

