நடந்து முடிந்த கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பானியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் 136 தொகுதிகளிலும் பாஜக 65 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகா தேர்தலில் தங்களை ஆதரித்தவர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்து, இதற்கு பிறகு இன்னும் வீரியத்துடன் செயல்படவேண்டும் என பாஜகவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
