அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேட்ஸ் நகரில் உள்ள பட்லர் மெமோரியல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பசிபிக் ஏரோஸ்பேஸ் 750XL ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.இந்த விமானத்தில் ஸ்கைடைவிங் பயிற்சிக்காக சென்ற ஸ்கைடைவ் கேசி அமைப்பைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் விமானி உள்ளிட்ட மொத்தம் 12 பேர் பயணம் செய்தனர். விபத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.மிசூரி மாநில நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு அதிகாரிகளின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டதாக பேட்ஸ் கவுண்டி ஷெரிப் சாட் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.விபத்து நடந்தபோது அங்கு இருந்த சில குடும்பத்தினர் இந்த துயர சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் சோகமும் பதற்றமும் நிலவியது.இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு, வானிலை நிலை மற்றும் பிற காரணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அவர்களின் பெயர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.அமெரிக்காவில் ஸ்கைடைவிங் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டாலும், அரிதாக இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த சம்பவம் மீண்டும் விமானப் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

