விமானப் பயணிகளுக்கான புதிய வரைவு விதிகளை DGCA வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி எந்த கட்டணமும் இல்லாமல் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம். டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டிருந்தாலும், பணத்தைத் திருப்பி வழங்கும் பொறுப்பு விமான நிறுவனங்களுக்கே இருக்கும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டதும் 21 வேலை நாட்களுக்குள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்; கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியிருந்தால், 7 நாட்களுக்குள் பணத்தைத் திருப்ப வேண்டும். பயணிகள் 48 மணி நேரத்திற்குள் பயண தேதியை மாற்ற விரும்பினால், கட்டண வேறுபாட்டை மட்டும் செலுத்தினால் போதும்; இதற்காக வேறு கட்டணம் வசூலிக்க முடியாது. ஆனால், உள்நாட்டு விமானங்களுக்கான பயணம் 5 நாட்களுக்குள் இருந்தாலும், சர்வதேச விமானங்கள் 15 நாட்களுக்குள் இருந்தாலும், இந்த சலுகை பொருந்தாது. மேலும், டிக்கெட் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் ரத்து செய்யவோ மாற்றவோ கட்டணமின்றி முடியும். பெயரில் உள்ள எழுத்துப் பிழைகளை 24 மணி நேரத்திற்குள் இலவசமாக திருத்தலாம். மருத்துவ அவசரம் போன்ற காரணங்களால் டிக்கெட் ரத்து செய்ய நேர்ந்தால், விமான நிறுவனம் பணத்தைத் திருப்பவோ அல்லது எதிர்காலப் பயணத்துக்கு பயன்படுத்தக் கூடிய Credit Shell வழங்கவோ முடியும். இந்த வரைவு விதிகள் குறித்து பங்குதாரர்கள் நவம்பர் 30க்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என DGCA தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், விமானப் போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.

