சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நேற்று பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.
இன்று சுதந்திர தின விழா நடைபெறும் டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 26 முதல் செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி 10-வது முறையாக அவர் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். அவர் கொடி ஏற்றுவதற்கு, மேஜர் நிகிதா நாயர், மேஜர் ஜாஸ்மின் கவுர் ஆகியோர் உதவுவார்கள். அப்போது 21 குண்டுகள் முழங்கப்படும். பின்னர், உள்நாட்டு தயாரிப்பான மார்க்-3 துருவ் ரகத்தை சேர்ந்த 2 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்படும்.

