ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவில் உள்ள விலங்குகளின் அணிவகுப்பு முதன்முறையாக நடத்தப்படுகிறது. இந்த அணிவகுப்பில் ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் நாய்கள் பங்கேற்க உள்ளன.டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் மாநிலங்கள், மத்திய அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும். இதில், மாநில அரசுகளின் சாதனைகள் மற்றும் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்படுகின்றன.இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி உட்பட 9 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி ‘பசுமை மின் சக்தி’ என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவில் இடம்பெறும் விலங்குகளின் அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ரக ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் ரக குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன நாய்கள் மற்றும் ஏற்கனவே சேவையில் உள்ள ஆறு நாய்கள் கலந்து கொள்கின்றன. இந்த அணிவகுப்பு குடியரசு தின விழாவில் சிறப்பு அம்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

