கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம்; 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என அறிவிப்பு

அரசியல் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் போராட்டம்/ கலவரம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் பொருள்களை எடுத்து செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 6ம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் பேசுகையில், கர்நாடகாவில் 1ம் தேதியில் இருந்தே சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே லாரிகளுக்கான டயர்கள், பிற உதிரி பாகங்கள் விலை, காப்பீட்டு கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் லாரிகளை பராமரித்து இயக்குவதே உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனை நம்பி வாழ்க்கை நடத்தும் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளது. அதனால் தான் டீசல் விலை, சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் ஏப்ரல் 14ம் தேதிக்குள் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.இந்த கோரிக்கையை கர்நாடக அரசு பரிசீலிக்கவில்லை. இதனால் திட்டமிட்டப்படி நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. ஃபோக்ஸ்லோவா கூட்டமைப்பு கர்நாடகாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். இதில் கிட்டத்தட்ட 6 லட்சம் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 196 லாரி சங்கங்கள் உள்ளன. சுமார் 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என்பதால் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடு பல்வேறு பகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்தால் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, தினசரி வரும் காய்கறி, பழங்கள் வரத்து குறைந்தால், விலைவாசி உயர வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *