பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். வழக்கமாக பிரதமர் – முதலமைச்சர் இடையேயான சந்திப்பு 15 நிமிடங்கள் வரை நடைபெறும் நிலையில், சுமார் 40 நிமிடங்கள் பிரதமர் மோடியும் முதலமைச்சர் ஸ்டாலினும் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும், பள்ளிக் கல்வித்துறைக்கான சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு நிதி விடுவிக்க வேண்டும், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளதாக கூறிய முதல்வர், ஆனால், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் மோடி உடனான சந்திப்பு இனிமையாக இருந்ததாகவும், இச்சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கைகளில்தான் உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

