கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றிருந்த நிலையில், ரெயில்வே கேட் வழியே கடந்து செல்ல முயன்ற போது, அந்த வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. ரயில் மோதியதில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு, வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், இரு மாணவி என 3 பேர் பலியாகி உள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்தின் முக்கிய காரணமாக கூறப்படுவது, ரயில் வரும் நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததாகவும் ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடாமல் ,அவர் பணியின்போது தூங்கியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே செல்கின்றன. இதனால், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

