கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட தருணத்தில் நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கும் வகையிலான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29ஆம் தேதி, நள்ளிரவு 1 மணிக்கு மேல் திடீரென அதீத வேகத்தில் கடையில் பாயும் வெள்ளம், அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்துச் செல்வது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரிகிறது. சூரல்மலை பகுதியில் இருந்த ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் தான் இந்த காட்சிகள் பதிவாகின. பாறைகளும் திடீரென வந்து விழுந்ததால், கடையின் சுவர்கள் உடைவதும் அந்த காட்சிகளில் தெரிகிறது. அங்கிருந்த பூனையும் இறுதி நொடியில் தப்ப முயன்றதும் அதில் பதிவாகி இருக்கிறது.
கடந்த ஜூலை 29ஆம் தேதி இரவு வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பூஞ்செரிமட்டம் என்ற கிராமத்தில் தொடங்கிய நிலச்சரிவு, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளை நிலைகுலையச் செய்தது. இந்த இயற்கை பேரிடரில் 400-க்கும் அதிகமானோர் பலியாகினர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

