அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம்பெற்றிருந்தது. அந்த அணியின் லீக் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தன.இந்த நிலையில், இந்தியாவில் தங்களது அணிக்கு போதிய பாதுகாப்பு இருக்காது எனக் கூறிய வங்கதேச கிரிக்கெட் வாரியம், தங்கள் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், வங்கதேச அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியது.போட்டிகள் தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ளதால், போட்டி அட்டவணை மற்றும் பயண ஏற்பாடுகளை மாற்ற முடியாது எனவும் ஐசிசி தெரிவித்தது. மேலும், வங்கதேச அணியின் இடமாற்ற கோரிக்கை தொடர்பாக ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் 16 ஐசிசி உறுப்பினர் நாடுகளில் 14 நாடுகள் வங்கதேசத்தின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லை.இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவுக்கு தங்களது கிரிக்கெட் அணி பயணிக்காது என வங்கதேச அரசு அறிவித்தது. இதன் காரணமாக, வங்கதேச அணியை இந்த தொடரிலிருந்து விலக்கி, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை சேர்க்க ஐசிசி முடிவு செய்துள்ளது.இதனால் தற்போது ‘சி’ பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நேபாளம், இத்தாலி அணிகளுடன் ஸ்காட்லாந்து அணியும் போட்டியிட உள்ளது. ஐசிசியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வட்டாரங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

