சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமானநிலையத்தில், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாட்டின் 78 ஆவது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 அன்று, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி விமானநிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் வரும் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன.
உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரம், சர்வதேசப் பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக விமான நிலையத்துக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

