19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். தொடக்க வீரர் ஆதர்ஷ் சி 52 ரன்களும், கேப்டன் உதய் சஹாரன் 3 ரன்களும் சேர்த்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சீராக விழுந்தாலும் பேட்ஸ்மேன் முஷீர் கான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 126 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகைள இழந்த இந்திய அணி 295 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அதிகபட்சமாக கேப்டன் ஆஸ்கர் ஜேக்சன் 19 ரன்கள் எடுத்தார். ஜாக் கம்மிங் 16 ரன்னும், அலெக்ஸ் தாம்சன் 12 ரன்னும், ஜேம்சன் நெட்சன் 10 ரன்னும் எடுத்தனர். 28.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

