ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்தது; மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியது

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

2024 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 57வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 165 ரன்களை எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் வாணவேடிக்கை நிகழ்த்தியதால், ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி, 167 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ஏற்கெனவே புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் மும்பை அணி, 12 போட்டிகளில் விளையாடி, 8 தோல்விகள், 4 வெற்றியுடன் உள்ளது. மேலும், கொல்கத்தா, லக்னோ அணிகளுக்கு எதிராக மும்பை அணி இன்னும் தலா ஒரு போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை வெற்றிபெற்றாலும், 12 புள்ளிகள்தான் கிடைக்கும். அதே நேரத்தில் புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் குஜராத் அணி இன்னும் 3 போட்டிகளில் விளையாடவுள்ளதால், மூன்றிலும் வெற்றிபெற்றாலும் 14 புள்ளிகளைப் பெறலாம்.
இதன்மூலம், மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் மிக மோசமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருவது, அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலாவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2ஆவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 3ஆவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 4ஆவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *