இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று அனுரகுமார திசாநாயகே புதிய அதிபராகிறார்

அரசியல் இலங்கை உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம் என இலங்கை மக்களுக்கு அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகே அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை நிலவரத்தில், எதிர்பாராவிதமாக இலங்கையின் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுர குமார திசநாயக்க 53.84% வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்திருந்தார். மேலும், மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் அனுர குமார முன்னிலை வகித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, இலங்கையின் முக்கிய முகங்களான தற்போதைய அரசின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 29%-க்கு குறைவாகவும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க 17%-க்கு குறைவாகவும், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மகன் 3% அளவிலும் வாக்குகளை பெற்றிருந்தனர்.
பெருவாரியான வாக்குகளைப் பெற்ற அனுரகுமார திசாநாயகே இலங்கையின் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் தனது எக்ஸ் தள பதிவில், இலங்கை மக்களுக்கு புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது-
பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகும். இந்த சாதனை எந்த ஒரு தனி நபரின் உழைப்பின் விளைவாக ஏற்படவில்லை. மாறாக உங்கள் இலட்சக் கணக்கானவர்களின் கூட்டு முயற்சியால் உருவாகியுள்ளது.
உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. இந்த நோக்கத்திற்காக தங்கள் வியர்வையையும், கண்ணீரையும், தங்கள் வாழ்க்கையையும் கூட அர்ப்பணித்த பலரின் தியாகத்தால் எங்கள் பயணம் செதுக்கப்பட்டுள்ளது.
அவர்களின் தியாகங்கள் மறக்கப்படவில்லை. அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களின் செங்கோலை நாங்கள் தாங்குகிறோம். நம்பிக்கையினாலும் எதிர்பார்ப்பினாலும் நிரம்பிய கோடிக்கணக்கான கண்கள் எம்மை முன்னோக்கித் தள்ளுகின்றன. ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம்.
இந்த கனவை புதிய தொடக்கத்தில் மட்டுமே நனவாக்க முடியும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். நாம் ஒன்றாக இணைந்து இந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்! என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *