திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன் பெற அலைமோதிய கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள்

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அதன் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதன்படி ஜனவரி 10 முதல் 19 ஆம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். 2024ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி கிடையாது. மாறாக 2025ம் ஆண்டில் வருடத்தின் துவக்கம் மற்றும் இறுதி என இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வர உள்ளன. 2025ம் ஆண்டின் ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான இலவச தரிசன டோக்கன் வாங்க திருப்பதியில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக பலியானார். இதேபோல் மேலும் 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். இதையடுத்து கூட்ட நெரிசலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நெரிசலில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் திருப்பதி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் கூட்ட நெரிசலில் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *