இந்தியா 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நாடு. இந்திய மக்களின் கடன் விவரங்கள் குறித்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு அதிகார பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் ,கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி :கடன் தொடர்பான தகவல் நிறுவனமான சிபில் கூற்றின்படி, இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான சராசரி கடன் கடந்த 2023-ல் ரூ.3.9 லட்சமாக இருந்த நிலையில் தற்போது ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால் இது மொத்த மக்கள்தொகையைக் கருத்தில் கொண்ட சராசரி கடன் அல்ல என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த கடன்களில் பெரும்பாலானவை உயர் கிரெடிட் மதிப்பெண் உள்ள நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் சொத்து உருவாக்கம் தொடர்பான கடன்களை மட்டுமே அவர்கள் எடுத்துள்ளனர். குடும்ப நிதி சொத்துகள் ஜி.டி.பி.யுடன் ஒப்பிடும் போது, 2023-ல் 103.5 சதவீதமாக இருந்த நிலையில் 2024-ல் 106.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மக்கள் நிதி நிலை மேம்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.61.47 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 10.1 சதவீதம் அதிகமாக உள்ளது. இருப்பினும், வெளிநாட்டு கடன் ஜி.டி.பி. விகிதம் 19.1 சதவீதம் மட்டுமே என்பதால், இது சீராகவே கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

