கேரளாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ ஆகிய மூன்று கூட்டணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இதில், காங்கிரஸ் கூட்டணி வெற்றியை நோக்கி வலுவாக முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 71 தொகுதிகளைத் தாண்டி, சுமார் 100 தொகுதிகளில் யுடிஎஃப் முன்னிலை வகித்துள்ளது. இதனால் ஆளும் எல்டிஎஃப் மற்றும் பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளன.கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் மட்டும் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த வெற்றி, மாநில அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பல மாநிலங்களில் பின்னடைவை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய ஊக்கமாக இருக்கும். தென்னிந்தியாவில் கர்நாடகா, தெலங்கானா ஆகியவற்றுக்கு பிறகு கேரளாவிலும் வலுப்பெறுவது, எதிர்கால தேசிய தேர்தல்களில் காங்கிரஸுக்கு கூடுதல் பலமாக அமையும். அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முக்கியமான மாநிலமான கேரளாவிலும் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டால், அது இடதுசாரி அரசியலுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

