தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, என்.ஆனந்த் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலிசார் கைது செய்து தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.
முதலமைச்சர் மற்றும் நடிகை குறித்து அவதூறு பேசியதாக உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், திமுக தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனிடையே விசாரணைக்கு பின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல் நிலைய பிணையில் இன்றே விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு உதயநிதியை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு போலீசார் திடீரென வாகனத்தைத் திருப்பி திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில் தான் இறங்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார். தொடர்ந்து விசாரணைக்காக காவல் வாகனத்தில் இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் உள்ளே சென்றுள்ளார்.

