தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் நிகோடினை சேர்த்து உருவாக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி விதிக்கப்படும் இந்த தடை, ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த ஆண்டு, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், புகையிலைப் பொருட்களுக்கு விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், குட்கா பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு அதாவது, 2026ம் ஆண்டு மே 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, புகையிலை மற்றும் நிகோடினை சேர்த்து உருவாக்கப்படும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகிக்கவும், வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்குமான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

