திருநெல்வேலியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியதுடன், இன்று சமூக நலத்துறை அதிகாரிகள் கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்சி எனப்படும் மத்திய பாடத்திட்டத்தை தவிர, மற்ற பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கல்வி பெறுவதற்காக அதிக அளவில் சேர்கின்றனர். இதன் விளைவாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நீட் பயிற்சி மையங்கள் உருவாகியுள்ளன. முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா என்பது தொடர்பாக சந்தேகம் இருப்பினும், அதிக கட்டணங்களை வசூலிக்கும் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற ஆசையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த பயிற்சி மையங்களுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கின்றனர்.தமிழகத்தில் மட்டும் சுமார் 800-க்கும் மேற்பட்ட நீட் பயிற்சி மையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்றவர், பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 12 மாணவர்கள் இடம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில், அங்கு பல மாணவ மாணவிகள் சேர்ந்து பயின்று வருகின்றனர். அவர்களிடமிருந்து 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர், மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.மேலும், 12 மணி நேரத்திற்கு மேலாக பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் ஒரு மாணவன் தூங்கியதாக கூறப்படுகிறது, இதனால் அவர் தாக்கப்பட்டதாகவும் அந்த மாணவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், நீட் தேர்வு பயிற்சி மையத்தின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று சமூக நலத்துறை அதிகாரிகள் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

