மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய வன்முறை

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் மற்றவை

மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இந்த தாக்குதல் போரோபெக்ரா காவல் நிலையத்தின் எல்லைக்குள் உள்ள கிராமத்தை இலக்காகக் கொண்டு நடைபெற்றது. தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதற்கான பதிலாக, பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு எதிராக துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர், இரு தரப்பினருக்கிடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. வன்முறை காரணமாக முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். போரோபெக்ரா பகுதி அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் இதுபோன்ற பல தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. மணிப்பூரின் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையில் நடைபெறும் மோதலுக்கு அமைதி நிலைமையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னணியில், இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *