சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி மும்பையை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி சென்னை அணியின் துல்லியமான பந்து வீச்சுக்கு முன்னால் ரன்கள் குவிக்க திணறியது. அந்த அணியின் இன்னிங்ஸில் மொத்தமே 5 சிக்சர்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.j
ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க, சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், டிரெண்ட் போல்ட் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சுழற் பந்துவீச்சாளர் நூர் அஹமது 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து வில் ஜாக்ஸ், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் நமன் திர் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார்.
20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவர்களில் பவுலர் தீபக் சாஹர் 15 பந்துகளில் தலா 2 சிக்சர் மற்றும் பவுண்டரிகள் அடித்து 28 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மும்பை அணி 155 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த ரச்சின் – ருதுராஜ் இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 26 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரிகள் அடித்த ருதுராஜ் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிவம் துபே 9 ரன்னும், தீபக் ஹூடா 3 ரன்னும், சாம் கரண் 4 ரன்களும் எடுத்து வெளியேற சென்னை அணிக்கு அழுத்தம் அதிகரித்தது.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். அவரும் ரவீந்திர ஜடேஜாவும் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர்.
19.1 ஓவரில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 45 பந்துகளை எதிர் கொண்ட ரச்சின் ரவிந்திரா 4 சிக்சர் இரண்டு பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சென்னை அணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
