இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அரசின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றார்.2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதில் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்று தற்போது 15 அமைச்சர்களுடன் அமைச்சரவை நடத்தி வருகிறார். இன்னும் மூன்று அமைச்சரவைப் பொறுப்புகள் காலியாக உள்ளன.அமைச்சரவைப் பட்டியலில் இதுவரை முஸ்லிம் சிறுபான்மையினர் யாரும் இடம்பெறாத நிலையில், முகமது அசாருதீன் அவர்களின் நியமனம் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அவர் ஏற்கனவே தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.பதவியேற்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் அமைச்சராகப் பதவியேற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கட்சியின் தலைமைக்கும், என்னை நம்பிய மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இதயபூர்வமான நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு வழங்கப்படும் எந்தப் பொறுப்பாக இருந்தாலும், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் பணிபுரிவேன்,” என்று தெரிவித்தார்

