சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, இத்துறையின் செயல்பாடுகள் குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையானது, அரசினால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரை, முதலமைச்சரால் விதி 110இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட இதர அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது அமைச்சர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் போன்றவைகளை செயல்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் துறையாகும்.
இத்துறையினால் முன்னெடுக்கப்பட்ட சில முயற்சிகளான மாவட்டங்களின் வளர்ச்சிக்கான ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான ‘நான் முதல்வன்’ திட்டம், இளம் வல்லுநர்களின் திறன்மிகு ஆற்றலை அரசுத்திட்டங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்’ ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
