ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஆந்திராவில் வரும் 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். அதில், அமராவதியை போன்று விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய நகரங்களையும் சேர்த்து மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத் தொகை 13 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும், பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ஒரு லட்சத்தில் இருந்து மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
